இந்திய அண்ணா நூலக கட்டிட அரங்கில் நடைபெற்ற தமிழ் இணையம் 100 -நிகழ்வு
தமிழ் இணையக் கழகம் – தமிழ்நாடு & தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் – இலங்கை இணைந்து நடத்திய “தமிழ் இணையம் 100” நிகழ்வை 2-7 -2022 சனிக்கிழமை சென்னை, அண்ணா நூலக கட்டிட அரங்கில் நடைபெற்றது
இந்நிகழ்வின் தொடக்கமாக தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் அமைப்பின் செயலாளர் சி. சரவணபவானந்தன் வரவேற்புரை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்வின் நோக்கவுரையைத் தமிழ் இணைய கழகத்தின் தலைவர் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் அமைப்பின் நோக்கம் குறித்தும் இந்த நிகழ்வின் சிறப்புக் குறித்தும் பேசினார்.



நிகழ்வின் தொடக்கமாக தமிழ் இணையக் கழகம் நடத்திய இணைய வழி உரையாடல் 100 நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட 18 கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கட்டுரையை நூலாக்கம் செய்து ஆய்வுக்கோவையாக அமெரிக்காவில் வருகைபுரிந்திருந்த மணி மணிவண்ணன் அவர்கள் வெளியிட சென்னையின் இயங்கிவரும் இந்திய அரசின் தேசியத் தகவலியல் மையத்தின் துணைத் தலைமை இயக்குநரும் முனைவர் இ இனிய நேரு அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நூலை வெளியிட்ட தமிழ்க்கணிமையாளர் மணி மணிவண்ணன் அவர்கள் தமிழ் கணிமை தொடக்கம் குறித்தும் அது இன்று வளர்ந்து நிற்கின்ற வளர்ச்சி குறித்தும் தனது உரையில் விளக்கினார்.
தொடர்ந்து ஆய்வுக்கோவை பற்றி ஆய்வுரையை இலங்கையை சேர்ந்த தமிழ் கணிமையாளர் மு. மயூரன் அவர்கள், இந்த ஆய்வுக் கோவை இடம் பெற்றிருக்கின்ற கட்டுரைகள் ஒவ்வொன்றும் இன்றைய தொழில்நுட்பத்தை எவ்வாறெல்லாம் நாம் பயன்படுத்த வேண்டும் என்ற அமைப்பில் கட்டமைக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து தமிழ் கணிமையின் செயல்பாடுகள் குறித்தும் உலகளாவிய அளவில் தமிழ்க் கணிமையின் போக்குகள் குறித்த தனது கருத்தை முன்வைத்து பேசினார்.
நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை பேராசிரியரும் தமிழ் இணைய கழகத்தினுடைய பொருளாளர் முனைவர் கா.உமராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப உரையாக
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உதவி பேராசிரியர் முனைவர் விஜய் அவர்கள் கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பத்தை இன்று நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்துகின்ற பொழுதுதான் நாம் அடுத்த கட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை நமது சந்ததியருக்குக் கொண்டு செல்ல முடியும் என்று குறிப்பிட்டார்
தொடர்ந்து கட்டற்ற மென்பொருள், கணியம் அறக்கட்டளை நிறுவனர் திரு.த. சீனிவாசன் அவர்கள் திறமூல மென்பொருள் நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் அதனால் நமக்கும் அரசாங்கத்திற்கும் பல கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படும் என்றும் எனவே தொழில்நுட்பங்களைக் கட்டற்ற மென்பொருட்களைக் கொண்டே நாம் பயன்படுத்த உறுதி ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து முத்துராமலிங்கம் அவர்கள் இன்றைய நுட்பத்தை பைத்தான், ஜாவா போன்ற மொழியை தமிழ்ப் படித்த மாணவர்களுக்கு நாம் எளிமையாக கற்றுக் கொடுக்கலாம் என்றும் தமிழ் படித்த மாணவர்களுக்கு இன்று பணி வாய்ப்புகள் தொழில்நுட்ப துறையில் அதிகமாக கொட்டிக் கிடப்பதையும் அதனால் நாம் தமிழ் மாணவர்களை இந்த மென்பொருள் துறையில் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.
தொடர்ந்து அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகின்ற திரு.ப.கருணைதாஸ் பேசும்போது தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்துகின்றபொழுதுதான் ஒரு பொதுத் தன்மையை ஒட்டுமொத்த மாணவர்களும் சமூதாயத்தில் அடைய முடியும். அந்தப் பணியை நான் எனது பள்ளிக்கூட மாணவர்களுக்கு வழங்கி வருகின்றேன் என்றார். மாணவர்களுக்குத் தொழில்நுட்ப அறிவை மெதுவாக கற்றுக் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து பேராசிரியர் க. சண்முகம் அவர்கள் இன்றைய புதிய தொழில்நுட்பம் குறித்தும் அதேபோன்று தமிழ் இணையக் கழகம் சார்பாக ஒரு மாணவர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அதன்வழி புதிய தமிழ் கணிமை ஆய்வுகளை நம்மால் பொது மக்க்ளுக்குக் கொண்டு செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தமிழ் மென்பொருளாளர் நீச்சல்காரன் அவர்கள் தொழில்நுட்பத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து தமிழ் மென்பொருளை உருவாக்க வேண்டும் என்றார். ஒரு பிரிவு தமிழ் மென்பொருள்களை உருவாக்க வேண்டும்.மற்றொரு பிரிவினர் அந்த மென்பொருள்களைப் பயன்படுத்த கல்லூரி, பள்ளிகளில் பரப்புரை செய்யவேண்டும். இந்தப் பணியை இரண்டு குழுவும் இணைந்து செயல்பட்டால் தமிழ் கணிமை அடுத்தகட்ட வளர்ச்சி அடையும் என்று குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து 25- ஆண்டுகளாகத் தமிழ் விக்கிபீடியாவிற்குப் பங்களிப்பு செய்துவரும் தகவலுழவன் என்ற லோகநாதன் அவர்களுக்கு இணையத் தமிழ் ஆய்வாளர்- 2021 விருதை தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் முனைவர் ந.அருள் அவர்கள் வழங்கி கருத்துரை வழங்கினார்.
அதில் தமிழ் கணிமை 1995 எப்படி இருந்தது, 2000 ஆம் ஆண்டு அதன் வளர்ச்சி மேலும் பன்மடங்காக வளர்ந்தது. 2010 ஆம் ஆண்டு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை உத்தமம் அமைப்போடு கோவையில் நடத்திய மாநாட்டில்தான் முதன்முதலாக இணையம் தொடர்பான செய்தியைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறையில் இருக்கின்ற நூல்களை படி எடுத்து அதனை ஒருங்குறியில் மாற்றி மின்நூல்களாக வெளியிட ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். தமிழக அரசின் அறிவியல் தமிழ் மன்றம் என்பதை இனி இணையத்தமிழ் மன்றமாக மாற்றம் செய்ய ஆவணம் செய்வதாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்வில் கிழக்குப் பதிப்பக நிறுவனரும், பத்திரிகையாளருமான முனைவர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் தமிழ்க் கணிமையின் பல்வேறு வளர்ச்சி நிலைகளை இதுவரைக் கண்டிருந்தாலும் இன்னும் அது கடந்து செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் என்றும். முதலில் நாம் கணினியில் தமிழைப் பயன்படுத்த வேண்டும், அவ்வாறு பயன்படுத்துகின்ற போது ஏற்படுகின்ற சிக்கல்களைக் கழைய தமிழ் மென்பொருளாளர்களைக் கொண்டு நாம் மேன்மைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து சென்னையின் இயங்கிவரும் இந்திய அரசின் துணைத் தலைமை இயக்குநரும் தேசியத் தகவலியல் மையத்தைச் சார்ந்த முனைவர் இனியநேரு விழாச் சிறப்புரையில் மத்திய அரசின் மொழி தகவல் தொழில்நுட்ப திட்டத்தை மேன்மைப்படுத்தி வழங்கி வருகின்றார்கள் என்றும், ஆதார் அட்டைக்கூட அவரவர் தாய்மொழியில் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தகவல் தொழில்நுட்பத்தில் இந்திய அரசின் பங்களிப்பு அளப்பரியதாக இருப்பதாகவும் பல்வேறு புள்ளி விவரங்களை பட்டியலிட்டு குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து தமிழ் இணையக்கழகத்தின் துணைத்தலைவர் முனைவர் இரா குணசீலன், கூகுள் நிறுவனத்தில் வெளிப்புற பணியைச் செய்துவரும் திரு.வினோத்குமார், எழுத்தொவியர் நாணா, தகவலூழவன் கருத்துரை வழங்கினார்கள். நிகழ்வில் தமிழ்க்கணிமையாளர் 40 மேற்படோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் இறுதியாக தமிழ் இணையக்கழகத்தின் செயற்குழு உறுப்பினர் முனைவர் இரா.அகிலன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்
இதில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட காணொளியை இங்கே காணலாம்.