LatestNationNews

ஒன்டாரியோ மற்றும் கனடா அரசுகள் கையெழுத்து

பெரும் கட்டமைப்பு திட்டங்களுக்கு வேகமளிக்கும் வரலாற்று உடன்பாடு – ஒன்டாரியோ மற்றும் கனடா அரசுகள் கையெழுத்து

ஒன்டாரியோ மாகாணமும் கனடா மத்திய அரசும், பெரும் கட்டமைப்பு மற்றும் வள அபிவிருத்தி திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதிகளை எளிமைப்படுத்தும் நோக்கில் ஒரு வரலாற்று ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. தற்போது நடைமுறைக்கு வந்துள்ள “ஒரு திட்டம், ஒரு செயல்முறை, ஒரு தீர்மானம்” (One Project, One Process, One Decision) என்ற புதிய முறைமையின் மூலம், முக்கிய திட்டங்களுக்கு வழங்கப்படும் அனுமதிகள் குறிப்பிடத்தக்க வகையில் விரைவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்பாட்டின் படி, இதுவரை ஒரே திட்டத்திற்கு மத்திய மற்றும் மாகாண மட்டங்களில் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்டு வந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் நீக்கப்பட்டு, இனி ஒன்டாரியோ மாகாணத்தின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு செயல்முறை மட்டுமே நடைமுறையில் இருக்கும். இதன் மூலம் கட்டமைப்பு பணிகள் வேகமாக நிறைவேறுவதோடு, மாகாணம் முழுவதும் வள அபிவிருத்திக்கும் புதிய வாய்ப்புகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்பாடு குறித்து கருத்துத் தெரிவித்த ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட்,
“நாடு கட்டும் முக்கிய திட்டங்களைத் தடுத்து வந்த தேவையற்ற நிர்வாக தடைகளை நீக்கி, ஒன்டாரியோவும் கனடாவும் பாதுகாப்பான மற்றும் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ரிங் ஆஃப் ஃபயர் போன்ற பெரும் பொருளாதார வாய்ப்புகளை திறக்க உதவும் இந்த முயற்சிக்கு பிரதமர் மார்க் கார்னிக்கு நன்றி” என தெரிவித்தார்.

புதிய முறைமையின் கீழ், முன்பு மத்திய மற்றும் மாகாண இரு நிலைகளிலும் அனுமதி தேவைப்பட்ட திட்டங்கள் இனி ஒன்டாரியோ சுற்றுச்சூழல் மதிப்பீட்டின் கீழ் மட்டுமே பரிசீலிக்கப்படும். இதனால், ஒழுங்குமுறை செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டு, ஆய்வு கால அவகாசம் குறைக்கப்பட்டு, முதலீட்டாளர்களுக்கு தெளிவும் நம்பிக்கையும் உருவாகும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த உடன்பாட்டின் ஒரு பகுதியாக, ரிங் ஆஃப் ஃபயர் பகுதிக்கான சாலைத் திட்ட மதிப்பீடுகளை 2026 ஜூன் மாதத்திற்குள் முடிக்க கனடா தாக்க மதிப்பீட்டு முகமை உறுதியளித்துள்ளது.

கனடா பிரதமர் மார்க் கார்னி இதுகுறித்து,
“நாம் கட்டுப்படுத்தக்கூடிய விடயங்களில் கவனம் செலுத்தி, வலுவான, தன்னிறைவு கொண்ட மற்றும் நிலைத்த கனடிய பொருளாதாரத்தை உருவாக்குவதே புதிய அரசின் இலக்கு. ஒன்டாரியோவுடன் உள்ள இந்த உடன்பாடு, பெரும் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற உதவுவதோடு, வேலைவாய்ப்புகளையும் தொழில்துறை வளர்ச்சியையும் அதிகரிக்கும்” என கூறினார்.

முக்கிய கனிம வளங்களை அபிவிருத்தி செய்வது, ஒன்டாரியோவை போட்டித்திறன் மிக்க, தன்னிறைவு கொண்ட பொருளாதாரமாக மாற்றும் அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாகும். மின்சார வாகனங்கள், பேட்டரிகள், பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்கான கனிமங்களுக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வரும் நிலையில், ஒன்டாரியோவில் உள்ள வளங்கள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டுக்கு உகந்த சூழல், G7 நாடுகளில் முன்னணி முதலீட்டு மையமாக மாகாணத்தை மாற்றும் திறன் கொண்டது என அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒன்டாரியோ சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் பூங்கா துறை அமைச்சர் டாட் மெக்கார்த்தி,
“திட்ட காலக்கெடுகளை குறைத்து, வணிகங்களுக்கும் சமூகங்களுக்கும் உறுதியை வழங்குவது இன்றைய அவசியமாக உள்ளது. மத்திய அரசுடன் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை பேணிக்கொண்டே, வேலைவாய்ப்பும் செழிப்பும் உருவாகும் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாம் தீர்மானமாக செயல்படுகிறோம்” என தெரிவித்தார்.